முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விழுதுகள்


கனவு இல்லங்கள் அல்ல முதியோர் இல்லங்கள். மனதைக் கனக்க வைக்கும் இல்லங்கள். இன்று முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. மனித மனங்கள் மரத்துவிட்டன.

தளர் நடை இட்டு வரும் குழந்தையை தாங்கிப் பிடித்த மென்கரங்கள் இன்று கோலை துணையாக்கி கொண்டிருக்கின்றன.
நிலவைக் காட்டி தன் குழந்தைக்கு அமுதூட்டி மகிழ்வித்த அன்னை இன்று முதியோர் இல்லங்களில் உணவு உண்ணும் அவலநிலையை எண்ணி உள்ளம் குமுறுகின்றது.

குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளோடு இன்புற்று குதூகலித்த இன்ப நினைவுகள் பல தாய் தந்தையரின் கண்களில் கனவுகளாய் தோன்றி மறைகின்றன.

நண்பர்களிடம் கால நேரம் பார்க்காமல் அரட்டை அடிப்பவர்கள் தங்கள் தாய் தந்தையரிடம் சிறிது நேரம் பேசுவதற்கு தயங்குவதும் ஏனோ?

பொருள்களில் இல்லை இன்பம் .மனித மனங்களில் இருக்கின்றது இன்பம். இதனை அறிந்தவர் யாரோ?

வீட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்து அயராது உழைப்பவர்கள் இவர்கள் .இவர்களின் முதுது இன்று உழைத்து உழைத்து கூனல் கண்டு விட்டது.

சமுதாயத்தில் தன் பிள்ளையைத் தலைநிமிர்ந்து நடக்கச் செய்த பெற்றோர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி விடாமல் இருக்க வேண்டும் பிள்ளைகள்.

பணத்திற்கு அடிமையாகும் மனிதர்கள் பாசத்திற்கு அடிபணிய மறுப்பது ஏன் ?பாசம் நம்மைப் பக்குவப்படுத்தும் .பணம் நம்மை ஆணவம் கொள்ளச் செய்யும்.

பணத்தால் பாசத்தை விலை பேச முடியுமா?
முடியாதுதானே !மனைவியின் மன ரசனை அறிந்து பொருட்களை வாங்கிக் கொடுக்கும் கணவன் அன்னையின் விருப்பத்தை அறிய தவறியது ஏனோ?

நம் பிஞ்சு விரல்களைப் பிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்று வகுப்பறையில் உள்ளே விடும் பொழுது அம்மா என்று ஓடி அழுது கொண்டு வந்து கால்களை கட்டிக் கொள்ளும் போது அன்னையின் உள்ளத்திற்குள் எழும் படபடப்பு துடிதுடிப்பு இதயமே வெடித்து போன்ற நிலையை வேறு எவராலும் உணர்ந்து கொள்ள முடியாது

நோய்களால் நாம் அவதியுற்ற காலங்களில் இரவு முழுவதும் விழிகள் மூடாமல் அருகில் அமர்ந்து கண்ணுற்ற  நேரங்கள்.

பிறரிடம் நமக்காகப் பரிந்து பேசிய தருணங்கள் .இவற்றை நினைத்துப் பார்ப்போம் ! பெற்றோர்கள் பெருமைப்படுவது பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு தான்.

நாம் செல்லும் பாதையில் வழித்துணையாக வந்து நம் வாழ்விற்கு ஒளியேற்றி வைத்த தீபங்கள் இவர்கள்.

நாம் பாதை தவறி செல்லாமல் நம்மை பாதுகாத்து வழிநடத்தி சென்றவர்கள்.
நமக்கு நிழல் தந்து தாங்கிப் பிடித்த விழுதுகள்.  இன்று இளைப்பாறுவதற்கு நிழலின்றி தவிக்கின்றார்கள்.

ஆலமரத்தின் விழுதாக அடிமரத்தின் வேர்களான பெற்றோர்களைப் பாதுகாப்பது பிள்ளைகளின் கடமையாகும்.

யாரை மறந்தாலும் தாய் தந்தையரை மறவாது இருப்போம். வாழ்வில் இன்பம் அடைவோம்.


கருத்துகள்

கருத்துரையிடுக