"முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு" என்று உண்மை நட்பிற்கு இலக்கணம் வகுத்தார் வள்ளுவர் பெருமகனார். இன்று உண்மையான நண்பர்கள் யார் என்று பல நேரங்களில் இனம் கண்டு கொள்வது கடினமாக இருக்கின்றது.மரத்தின் நிறத்திற்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி போல இடத்திற்கு ஏற்றவாறு மனிதர்களின் குணத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி மனிதர்களை இச்சமூகத்தில் காணமுடிகின்றது. பிறர் மனதை புண்படுத்தும் கேலி ,கிண்டல் பேச்சுக்கள் ,பிறர் உள்ளத்தைத் துன்புற செய்யும் ஜாடையான பேச்சுக்கள் இன்று பெருகிவிட்டன. பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் இந்நிலையில் உண்மையான ஆனந்தத்தை காண முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். வள்ளுவர் புறங்கூறாமை என்ற ஓர் அதிகாரத்தையே வகுத்துள்ளார்.வள்ளலாரும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். வயதில் இளையவர்கள் சிலர் வயதில் பெரியவர்களை ஏய்! கிழவா ஏய்! கிழவி என்று கூறி பெரியவர்களின் உள்ளம் வருந்த தக்க செயல்களைச் செய்கின்றார்கள். வயதானவர்களும் உள்ளத்தால் இளமையானவர்கள் என...